October 22, 2011

ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாதஅறிஞர்கள் .ஞானி.


அறிஞர் போற்றுதும்…..ஞானி அவர்களின் கட்டுரை

அறிஞர்கள் போற்றப்படவேண்டும் என்பதை எல்லாருமே ஒப்புக் கொள்வார்கள். யார் அறிஞர் என்பதிலும் போற்றுதல் என்றால் என்ன என்பதிலும்தான் ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருக்க முடியும். மனித வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக மாற்றியமைக்கத் தேவையான கருத்துகளைச் சொல்பவர்களும், அந்தக் கருத்துகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பவர்களுமே அறிஞர்கள் என்பது என் கருத்து. போற்றுதல் என்பது சால்வை போர்த்துதல் அல்ல. கட் அவுட், பிளெக்ஸ் போர்டு வைத்து பால் அபிஷேகம் செய்வதும் அல்ல. இப்படி ஒருத்தர் வாழ்ந்தார்; இன்னதைச் சொன்னார்; இன்னதைச் செய்தார் என்று ஓர் அறிஞரைப் பற்றி அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தெரிவிப்பதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பதும்தான் போற்றுதல்.

அதனால்தான் நண்பர் துளசிதாசன் தான் முதல்வராக இருக்கும் திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியில் அறிஞர் போற்றுதும் என்ற நிகழ்வை ஆண்டுதோறும் நடத்த யோசனைகள் தந்து உதவ வேண்டுமென்று என்னிடமும் நண்பர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனிடமும் கேட்டபோது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற வருடம் வாழ்நாள் விருதை எழுத்தாளர் அசோகமித்திரனுக்கும், இந்த வருடம் ஓவியர்-எழுத்தாளர் மனோகர் தேவதாசுக்கும் அளித்தார்கள். கூடவே படைப்பூக்க விருதுகளை இளம் எழுத்தாளர்களுக்கு அளித்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னால் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவதென்பது பரவசமும் நெகிழ்ச்சியுமாக இருந்தது.இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகப் பள்ளிகளில் நடப்பதென்பது இன்னமும் கனவு போலவே இருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் இளம் மனங்களுக்கு பாடங்களைத் தவிர பள்ளிக்கூடம் பொதுவாக வேறு எதையும் அளிப்பதில்லை.ஆனால் வெளியிலிருந்து அவர்களுக்கு என்னென்னவோ கிடைக்கின்றன. மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டுவோரை மட்டுமே அறிஞர்களாக, முன்மாதிரிகளாக மாணவர்கள் அறிகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் மனதுக்குள் கேள்விகள் எழுந்தாலும் அதையெல்லாம் கேட்க இடமில்லை. ஆளில்லை என்பதாகவே அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

மீடியா எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சரியாகவே செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அடுத்தடுத்த வாரங்களில் உலக அளவில் முக்கியமான இரு கணினி வல்லுநர்கள் இறந்துபோனார்கள். ஒருவரை உலகமே கொண்டாடியது. அவர்தான் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் உருவாக்கி விற்பனைக்கு விடுத்த ஐ போன், ஐ பாட்கள் அன்றாட வாழ்க்கையையே பலருக்கு மாற்றியமைத்தன. வணிக சாமர்த்தியம் மிகுந்த தொழில்நுட்ப வல்லுநர் என்ற விதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பாராட்டுக்குரியவர்தான். ஆனால் அவர் புற்று நோயில் மரணமடைந்ததும் உலகம் முழுதும் குவிந்த பாராட்டுகள், புகழுரைகள் அடுத்த வாரத்தில் புற்று நோயில் இறந்த டென்னிஸ் ரிச்சிக்கு கிட்டவில்லை. ரிச்சி, ஸ்டீவ் ஜாப்சை விட உலகத்துக்கு முக்கியமானவர். இன்றைய கணினி உலகை இயக்கும் முக்கியமான தொழில்நுட்பங்களில் அடிப்படையானவை சீ லேங்வேஜும், யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமும்தான். இரண்டையும் உருவாக்கியவர் ரிச்சி. அவரும் அவர் சகாவான கென் தாம்ப்சனும் இரு தொழில்நுட்பங்களையும் உருவாக்கியதால்தான் கணினி இப்போதுள்ள எளிமையை அடைய முடிந்தது. பள்ளிக்கூடங்களில் கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்களுக்குக் கூட டென்னிஸ் ரிச்சியின் பெயர் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ரிச்சி அவர்களால் நிச்சயம் அறியப்படவேண்டியவர்.

உலக அளவிலான அறிஞர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகத்திலும் அந்த சமூகம் மறக்கக் கூடாத அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மீடியா வெளிச்சமும், அதிகார கவனிப்பும் அவர்களுக்குக் கிட்டாமல் போய்விடுகின்றன. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். இந்த வருடம் நான்கு அறிஞர்களின் நூற்றாண்டு வருடம். நால்வருமே வெவ்வேறு விதங்களில் தமிழ்ச் சமூகத்துக்குப் பங்களிப்பு செய்தவர்கள்.

ஆனால் நான்கு பேரைப் பற்றியும் மீடியா உலகமும் அதிகார் உலகமும் இன்னமும் கண்டுகொள்ளவே இல்லை.

ஏ.கே.செட்டியார் எனப்படும் ஏ.கருப்பன் செட்டியார் தமிழின் முன்னோடி ஆவணப்படத் தயாரிப்பாளர். பயண இலக்கிய எழுத்தாளர். காந்தியைப் பற்றி காந்தி வாழ்த காலத்திலேயே டாக்குமெண்ட்டரியை உருவாக்கியவர். அதற்காக பிரிட்டன், தென் ஆப்ரிக்காவுக்கெல்லாம் சென்று படச் சுருள்களத் திரட்டினார். 19 வயதிலிருந்து உலகம் சுற்றத் தொடங்கிய வாலிபனாகிய ஏ.கே செட்டியார் தன் பயண அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் ஒளிப்பதிவு படித்தார். சுமார் 40 ஆண்டு காலம் குமரி மலர் என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். செட்டியாரின் பயண இலக்கிய நூல்கள் ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இருக்க வேண்டியவை. அவரது காந்தி படம் எல்லா பள்ளிகளிலும் காட்டப்படவேண்டும்.

மு.வரதராசன் எனப்படும் மு.வ கல்வியாளர், எழுத்தாளர். ஐம்பதுகளில் கல்வி பரவலாகத் தொடங்கியபோது வாசிப்புப் பழ்ககம் படித்தவர்கள் மத்தியில் பெருக நாவல்களும் தொடர்கதைகளும் காரணமாக இருந்தன. அப்போது நல்ல தமிழும் நல்ல சிந்தனையும் நாவல்கள் மூலம் பரவவேண்டுமென்ற நோக்கோடு மு.வ நாவலாசிரியரானார். தமிழறிஞராகவும், கல்வி நிர்வாகியாகவும் புகழ் பெற்றவர் மு.வ. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இன்று வரை மு.வவின் தமிழ் இலக்கிய வரலாறு நூலையும், திருக்குறள் உரையையும் மிஞ்சக்கூடிய நூல்கள் அத்துறைகளில் வரவில்லை.

காமராஜரை கல்வித்தந்தை என்று புகழ்பவர்கள் எல்லாரும் நிச்சயம் கல்வித்தாய் என்று புகழவேண்டியவர் நெ.து.சுந்தரவடிவேலு. தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் காமராஜரின் யோசனை. செயல்படுத்தியவர் நெ.து.சு. பட்டி தொட்டியெங்கும் பள்ளிக் கல்வி பரவியது நெ.து.சு கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதுதான். பள்ளிக் கல்வியில் திறமையாக் செயல்பட்டதைப் போலவே செனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நெ.து.சு செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காக கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் ரிஃபிரஷர் கோர்சைக் கொண்டு வந்தார். ஊழல் அரசியல்வாதியும் ஊழல் அதிகாரியும் கைக் கோர்த்தல என்ன ஆகும் என்பதை இப்போதெல்லாம் பார்க்கிறோம். நல்ல அதிகாரியும் நல்ல அரசியல்வாதியும் கை கோர்த்துக் கொண்டால் என்ன செய்யமுடியும் என்பதைக் காட்டியவர்கள் நெ.து.சுவும் காமராஜரும்.

மேற்கண்ட மூவருடனும் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. ஆனால் நான்காமவரான புரிசை கண்ணப்பத் தம்பிரானுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது நிச்சயம் பெரும்பேறுதான். தெருக்கூத்தின் பீஷ்மராக விளங்கிய கண்ணப்த் தம்பிரானின் ஆட்டத்தை 1976லிருந்து அவர் இறக்கும் காலம் வரையிலும் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன். ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறைக்கு கண்ணப்ப தம்பிரான் செய்த பங்களிப்பு கலைத் துறையின் முக்கிய மைல்கல். மரபான தெருக்கூத்திலிருந்து நவீன நாடக வடிவத்துடன் இசையும் அம்சங்கள் எவை, விலகும் அம்சங்கள் எவை என்பதை நவீன நாடகக்காரர்கள் புரிந்துகொண்டதை விட அதிகமாக புரிந்துவைத்திருந்தவர் கண்ணப்பத் தம்பிரான். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் காளி நாடகத்தில் தம்பிரான் நடித்தது எனக்கு இன்னமும் மனதில் இருக்கிறது. கூத்து நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அதே சமயம் கூத்தின் அம்சங்களை நவீன நாடகத்தின் தேவைக்கு ஏற்பக் கையாண்டதாக இருந்தது அவர் நடிப்பு. நோபல் எழுத்தாளர் மார்க்வெசின் படைப்பு, பாரதியின் பாஞ்சாலி சபதம் என்று வெவ்வேறு படைப்புகளை கூத்து வடிவத்தில் செய்துபார்க்கும் துணிவும் திறமையும் கண்ணப்பத் தம்பிரானுக்கு இருந்தன.

இந்த நான்கு பேரும் தமிழ்கத்தின் முக்கிய அறிஞர்கள். ஆனால் இந்த நூற்றாண்டு சமயத்திலேனும் அவர்களை நினைவுகூர தமிழகத்தில்

என்ன நடவடிக்கைகள் உள்ளன ? கண்ணப்ப தம்பிரானின் வாரிசுகள் புரிசையில் அவர் பெயரில் கூத்துப் பல்ளி நடத்திவருகிறார்கள். அங்கே நூற்ராண்டைக் கொண்டாடி பல குழுக்கள் பங்கேற்ற நாடக விழா நடத்தினார்கள். எங்கள் பரீக்‌ஷாவும் பாதல் சர்க்காரின் நாடகத்தை நிகழ்த்தியது. நெ.து.சுந்தரவடிவேலுவின் வாரிசு லெனின் ஒரு விழா நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மு.வவின் வாரிசுகளும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். ஏ.கே.செட்டியாருக்கு வாரிசுகள் இல்லை.

என்ன அவலம் ! இந்த அறிஞர்களின் வாரிசுகள் மட்டும்தான் அவர்களின் நூற்றாண்டை நினைவு கூர்ந்து ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலை எவ்வளவு அவமானத்துக்குரியது ? அரசாங்கமும், பல்கலைக் கழகங்களும் கலை அமைப்புகளும் பள்ளிக்கூடங்களும் அல்லவா இவற்றை செய்யவேண்டும் ? மறைந்துவிட்ட அறிஞர்களை நினைவுபடுத்திக் கொள்ள இயலாத ஒரு சமூகம், வாழும் அறிஞர்களை எங்கே

எப்படி பராமரிக்கும் ? இந்த வறண்ட சூழலில்தான் திருச்சி பள்ளி முயற்சி சிறு துளிராகத் தெரிகிறது.

அரசு நினைத்தால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த வருடம் இந்த நான்கு அறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களையும் கொண்டாடலாம். ஒரே ஒரு நாள். ஒரு சில மணி நேரங்கள்தான் தமிழில் இயங்கும் அத்தனை தொலைக்காட்சிகளும் நினைத்தால் இந்த ஆண்டு முழுவதும் இந்த அறிஞர்களை தமிழர்களுக்கு நினைவூட்டலாம். வாரம் ஒரு முறை ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான். தமிழ்ப் பத்திரிகைகள் நினைத்தால் அட்டைப்படங்களாக இந்த அறிஞர்கள் இடம்பெறலாம். நாங்கே நான்கு இதழ்களில் மட்டும்தான்.

ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களின் மூளைகளில் ஒரு முக்கியமான மரபு பதிவாகும். அறிஞர் போற்றுதுடும். thankyou................................http://gnani.net

October 21, 2011

பொது மக்களின் பார்வையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு.

மொத்த 10 மா நகராட்சியில் உள்ள வாக்குகள் - 1 கோடி மொத்த 150 நகராட்சியில் உள்ள வாக்குகள் - 1 கோடி 500 பேரூராட்சி பஞ்சாயத்தில் உள்ள வாக்குகள் - 3 கோடி (தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடி வாக்குகள் உள்ளன) 1)எதிர்பாத்த படி அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சி, அப்புறம் இப்பதான் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த 6 மாதத்தில் மக்கள் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் தேதிமுக வந்த காரணத்தால் அதிமுக சட்ட சபையில் வெற்றி பெற்றது என்ற கருத்தை உடைத்து விட்டது. 2)திமுக பெரிய சிட்டியில் சரியாக வரவில்லை. ஆனால் நகராட்சி/பேரூராட்சி/கிராம பஞ்சாயத்தில் மதிப்பான இரண்டாம் இடத்தில் உள்ளது. நகராட்சியிலும், பேரூராட்சி/கிராம பஞ்சாயத்தில் தான் 60% தமிழகம் வசிக்கிறது. இது திமுக ஒரேடியாக சரிந்து விட வில்லை என்று காட்டுகிறது. தொண்டர்கள் பலம் உள்ள கட்சி என்பதையும் காட்டுகிறது 3) தேதிமுக. சுத்தமாக படுத்து விட்டது. மக்கள் இந்த முறை விஜய காந்துக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். மக்கள் மனதில் விஜய காந்த் ஒரு முதிர்ச்சியான தலைவராக படவில்லை. விஜய காந்த் முன்பு தனியாக நின்ற போது 8 - 10 சதவீத ஓட்டு கிடைக்கும். அதுவே இந்த முறை கிடைக்கும் என்பதில்சந்தேகமே? விஜய காந்துக்கு வந்த கூட்டம் ஒரு தற்காலிக கூட்டம் என்பதை நிரூபிக்கிறது. 4) வைகோ: பரவலாக இல்லாமல், நிறைய இடத்தில் 3 வது இடத்தில் வந்துள்ளது. வைகோவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதை காண்பிக்கிறது(கோவை, தூத்துகுடி, திருச்சி...). சில நகராட்சியில் வெற்றி பெறலாம். நிறைய இடத்தில் திமுகவின் ஓட்டை உடைத்து வெற்றி வாய்ப்பு எடுத்து இருக்கிறார். நல்ல தலைவர்,தொண்டர்கள் கொள்கை பிடிப்பு இருந்தால், கட்சி தோல்வியிலும் துவண்டு விடாது என்பதற்கு எடுத்து காட்டு. அரசியலில் பதவி இல்லை என்றால் நிறைய பேர் ஓடி விடுவார்கள். ஆனா இவ்வளவு நாள் வைகோ தக்க வைத்துள்ளார். 5) காங்கிரஸ் அவ்வளவு மோசம் இல்லை. ஆரம்ப காலம் முதல் எங்கெல்லாம் செல்வாக்கு உண்டோ அங்கு 3 வது இடத்தில் வந்துள்ளது 6) பா.ம.க, வி.சி., பா.ஜ.க மரண அடி வாங்கும் என்று எதிர்பார்த்தது பொய் போகவில்லை. சொல்ல போனால் தமிழ் நாடு மக்கள் புத்திசாலிகள். அவர்கள் எந்த பத்திரிக்கை எப்படி எழுதினாலும், யோசனை பண்ணிஓட்டு போடறாங்க - போன தடவை வடிவேலுவை விட்டு விஜய காந்த அழிக்க பாத்தாங்க. மக்கள் கேட்கலை. ஆனா இப்ப விஜய காந்த் செயல் பாடு மக்களுக்கு பிடிக்கல. மக்களா பாத்து ஓரம் கட்டிட்டாங்க. யாரும் சொல்லல. - திமுக மந்திரிகள் உள்ள போனது உள்ளாட்சியில் அவ்வளவா பாதிக்கலை. அப்படின்னா, திமுக தொண்டர் பலத்தில் நடக்கிற கட்சி என்று இதிலிருந்து அறிய முடிகிறது.கெட்ட பெயர் உள்ள தலைவர்களை ஓரங்கட்டி விட்டு ( நேரு, வீர பாண்டி, ஈரோடு ராஜா), நல்ல பெயர் உள்ள இரண்டாம்கட்ட தலைவர்கள் வந்தால், திமுக உருப்படும். வைகோ மாதிரி தலைவர்கள் திமுக தலைவரா வந்தால் கட்சி வீறு கொண்டு எழுந்து விடும் - பாமகவும், வைகோவும் ஒரே சமயத்தில் வந்த கட்சி (1993 வாக்கில்). வைகோ இன்னும் தாக்கு பிடிக்கிறார். பா.ம.க சறுக்கி கொண்டே வருகிறது. வைகோவின் கொள்கை மீது தவறு சொல்லலாம். ஆனா அவர் சுய நல அரசியல் நடத்தல. அதுதான் வைகோ தாக்கு பிடிக்க காரணம். பா.ம.கவின் சுய நல அரசியலை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். மொத்தத்தில் மக்கள் புத்தி சாலிகள். அவர்களிடம் பொய் சொல்லி கொஞ்ச நாள் தப்பிக்கலாம் (பா.ம.க) ஆனால் கண்டு பிடித்து விட்டால் மரண அடிதான்... இந்த தேர்தல், வைகோ என்ற நல்ல தலைவனுக்கு மறு வாய்ப்பு கொடுத்துள்ளது (எனக்கு வைகோவின் அரசியல் கொள்கை பிடிக்காது, ஆனா அவர் அரசியல் நேர்மை பிடிக்கும்). விஜய காந்த் சந்தர்ப்ப அரசியலை மக்கள்வெறுக்கிறார்கள். மற்றபடிஎதிர் பார்த்ததுதான். தமிழ் மக்கள் புத்தி சாலிகள் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.




நன்றி

ரமணி.

மக்கள் புரட்சியால் முடிவுக்கு வந்தது கொடுங்கோல் ஆட்சி.

அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்பத்திவிடலாம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.லிபியா அதிபர் கடாபியை அந்த நாட்டு புரட்சிப் படையினராலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.மக்கள் நலனை புறக்கணித்து விட்டு என்னதான் ஆயுதங்களை வாங்கிக் குவித்து இரும்புக்கரம் கொண்டு எதிர்ப்பாளர்களை அடக்கி கொடுங்கோல் ஆட்சி நடத்தினாலும் மக்கள் புரட்சிக்கெதிராக எந்த அரசும் தாக்குப் பிடிக்க முடியாது.ஈராக்,லிபியாவைத் தொடர்ந்து ஏமன் ,சிரியா,பாகிஸ்தான் என பல நாடுகளில் உண்மையான மக்களாட்சியை எதிர் நோக்கியுள்ளனர் மக்கள்.



மன்னருக்கு எதிராக புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்தவர்தான் கடாபி.புரட்சியாளராக இருந்த அவர் கடந்த 42 ஆண்டு கால ஆட்சியில் கொஞ்ச கொஞ்சமாக மாறி மன்னரே பராவாயில்லை என மக்கள் நினைக்கும் வகையில் கொடுங்கோல் ஆட்சியாளராக மாறிப்போனார் .எதிர்ப்பவர்கள் திடீர் திடீரென காணமல் போயினர்.ஆட்சி மீது அதிருப்தி தெரிவிப்பவர்கள் உடனுக்குடன் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.எங்கு எதிர்ப்பு கிளம்பினாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது.சொந்த மக்கள் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்று குவித்தவர் காடபி.எத்தனை நாள் பொறுப்பார்கள் மக்கள்.கடந்த பிப்ரவரி மாதம் லிபியாவின் இளைஞர்கள் புரட்சிப்படையை உருவாக்கினர்.இந்தப் படைக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது.ஊர் ஊராக அரசுப் படையை வேட்டையாடி வந்த புரட்சிப் படைக்கு அமெரிக்க தலைமையிலான நோட்டொ படை ஆயுதங்களை வாரி வழங்கியது .தொழில்நுட்ப உதவிகளையும் அளித்தனர்.கடாபின் மறைவிடம் குறித்த ரகசிய தகவல்களை அவ்வப்போது புரட்சிப்படைக்கு தெரிவித்தது.புரட்சிப்படைக்கு ஆதரவாக நோட்டோ படையின் விமானங்கள் ,ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டன.அமெரிக்க எதிர்ப்பு கோசம் முழங்கிய கடாபியை பழிவாங்க புரட்சிப்படையை பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.



இறுதியில் சொந்த ஊரான சிர்தேவில் பதுங்கு குழியில் ஒளிந்திருந்த கடாபியை வெளியே இழுத்துப் போட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர் புரட்சிப்படையினர்.




ஆரம்பம் முதலே லிபியாக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தம்.பொருளாதாரத்தடை உளவு அமைப்பு மூலம் மறைமுக சதி என்று லிபியாவையும் கடாபியையும் முடக்க நினைத்த அமெரிக்காவுக்கு உள்ளூர் மக்களின் புரட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்து கை கொடுத்தது.அதோடு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.முதலில் ஈராக் இப்போது லிபியா. இந்த வரிசையில் ஏமன்,சிரியா,பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் ஆட்சி மாற்றத்துக்கு காத்திருக்கின்றன.




செய்தி.தமிழ் முரசு மாலை நாளிதள்.நன்றி.

October 20, 2011

சூப்பர் ஸ்டாரின் பேட்டி.

தான் பூரண நலத்துடன் உள்ளதாகவும், ராணா படத்துக்காக தயாராகி வருவதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். மேலும் ராணா படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்பதையும் நிருபர்களிடம் தெரிவித்தார் ரஜினி.
உடல்நிலை சரியாகி, ஓய்விலிருக்கும் ரஜினி குறித்தும் அவரது ராணா படம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதுபற்றி சற்றும் அலட்டிக் கொள்ளாத ரஜினி, இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் ராணா படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஈடுபட்டு வந்தார்.
ஓய்விலிருந்த நேரத்தில், ரஜினி எங்கேயும் வெளியில் வராமல் இருந்தார். 5 மாத இடைவெளிக்குப் பின் ஷாரூக்கான் நடித்துள்ள ரா ஒன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் ரஜினி. இதற்காக அவர் மும்பைக்கே போய் வந்தார். பின்னர் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த ஒரு நண்பரின் இல்லத் திருமணத்தில் புயலாய் வந்து போனார்.
தான் எப்போதும் போல நல்ல சுறுசுறுப்புடன், பூரண நலத்துடன் இருப்பதை அனைவருக்கும் காட்டிவிட்ட ரஜினி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதன்கிழமை திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
அதே துள்ளல் நடை, விறுவிறு பேச்சு, கூடவே பிறந்த ஸ்டைலுடன் தனக்கே உரிய வேகத்தில் கும்பிட்டபடி நடந்துவந்தார் ரஜினி.
கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திய ரஜினி, கடவுள் கிருபையாலும், ரசிகர்களின் பிரார்த்தனைகளாலும் தான் மிகவும் நலமுடன் இருப்பதாகக் கூறினார். திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறிய ரஜினியிடம் நிருபர்கள் ஒரேநேரத்தில் பல கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு சிரித்தபடி ரஜினி கூறிய பதில்கள்:
ராணா படம் தள்ளிப்போனதன் காரணம் என்ன? படப்பிடிப்பு எப்போது?
ராணா படம் தொடங்க இன்னும் இரண்டொரு மாதங்கள் பிடிக்கும். காரணம் அது மிகப்பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆக்ஷன் மற்றும் காஸ்ட்யூம் ட்ராமா. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அநேகமாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.


சார்… உங்களுக்காக உங்கள் ரசிகர்கள் செய்த பிரார்த்தனைகள் குறித்து…
அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என் நன்றியை அவர்களுக்கு எப்படி சொல்வேன் என்று தெரியவில்லை. ஊடகங்கள் என் உடல் நலம் குறித்து மிகவும் அக்கறை காட்டின. அவர்களுக்கு நன்றி.
ரா ஒன்னில் ஷாரூக்கானுடன் நடித்துள்ளீர்களா?
ஆமாம்… ஷாரூக்கானுக்காக செய்து கொடுத்தேன். அதில் பணியாற்றியது சந்தோஷம்.
-இவ்வாறு கூறினார் ரஜினி.
பின்னர் அனைவருக்கும் தனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


நன்றி.
http//envazhi.com

October 19, 2011

ஜெயிக்கப்போவது யார் பீதியில் கழகங்கள்.

அனைவரும் எதிர் பார்த்துக்க கொண்டிருந்த திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று காலை எட்டு மணிக்கு துவங்குகிறது.அநேகமாக காலை பத்து மணிக்குள்ளாகவே யாருக்கு வெற்றி தோல்வி என தெரிந்துவிடும்.இரண்டு கழகங்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் பிரச்சனையாகவே கருதப்படுகிறது.ஆகவே அ.தி.மு.க வினரும் தி.மு.க வினரும் பீதியோடு தேர்தல் முடிவை எதிர் நோக்கி இருக்கின்றனர். கடந்த தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.கவே வெற்றி பெறும் என்று தமிழ் நாடே உரக்கச் சொன்னது.அதற்கு காரணமாக தி.மு.க வின் பண பலத்தையும் ஆள்பலத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.அந்த அளவுக்கு பணபட்டுவாடா அமோகமாக நடந்தது.அதே போல் தி.மு.க வினர் வெற்றியும் பெற்றனர்.இப்போது நடைப்பெற்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றுவார்கள் என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளா அல்லது அ.தி.மு.க வின் நல்லாட்சியா எதுவாயிருந்தாலும் கடந்த காலத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தல்களை விட இம்முறை நடைப்பெற்ற இடைத் தேர்தல் ஓரளவுக்கு நியாயமாகவும்,நேர்மையாகவும் நடைபெற்றது என்பது என் எண்ணம்.



இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.அ.தி.மு.க வா ,தி.மு.க வா வாகைசூட போவது யார் என்று.





அ.தி.மு.க வின் பக்கமே வெற்றியின் சாயல் தெரிகிறது என்பது என் எண்ணம் பார்க்கலாம்.

October 18, 2011

கூடங்குளம் விவகாரத்தில் தமிழ் நாட்டை ஏமாற்றியதா மத்திய அரசு.

புகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு ஆய்வறிக்கையை ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன. வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத் தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணு உலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. “அது நாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று நார்வேயின் ஆற்றல் தொழில் நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். கூடங்குளம் மக்கள் போராட்டத்துக்கு துணை நிற்க வேண்டுமே தவிர எதிர்க்க கூடாது. நமது தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கத்தில் ஒரு அணு மின் நிலையம் உள்ளது. தூத்துக்குடி, நெய்வேலி போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளன . நம் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாராம் தான் பல மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது இன்னும் ஒரு அணு உலை பல லட்ச கணக்கான மக்கள் வசிக்கும் இடங்களில் எதற்கு. தமிழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ, மேலும் வேலை வாய்ப்புகளை ஆசை காட்டி அணு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கும் பணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன . இப்பொழுது மக்களுக்கு அணு உலையின் கொடுமை தெரிந்து விட்டது. அதனால் எதிர்க்கிறார்கள். மின்சாரம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கான களமாக தமிழகத்தை மட்டும் பயன்படுத்துவது ஏன் ? ஏன் இந்தியாவில் வேறு மாநிலங்கள் இல்லையா ? நமது தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கத்தில் ஒரு அணு மின் நிலையம் இருக்குபோது இதை வேறு மாநிலத்தில் அமைத்து இருக்கலாமே.அணுமின் நிலையம் , அனல் மின் நிலையம் போன்ற எந்த திட்டமே இல்லாத மாநிலங்கள் கூட இந்தியாவில் உள்ளன .அந்த மாநிலங்களில் இல்லாத வசதியும்,வாய்ப்பும் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன? இதில் எதோ சூழ்ச்சி இருப்பதாகத்தான எண்ண தோன்றுகிறது.



இந்தப் பதிவு நண்பர் ஜெயசந்திரன் என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்ததாகும். நன்றி ஜெயசந்திரன்.




என்ன நோக்கத்தில் தமிழ்நாட்டை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது என்று தெரியவில்லை.ஒருவேளை தமிழன் தமிழ் தமிழ் என கூவிக்கொண்டிருப்பானேயொளிய தமிழுக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் போராடமாட்டான் என்று நினைத்தார்களோ?கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டை அப்போதும் ஏமாற்றியிருக்கிறது இப்போதும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

October 17, 2011

திருட்டு வி.சி.டி யில் திரைப்படம் பார்த்த நடிகர்.

திருட்டு சி.டி யை ஒழிப்போம் என்று ஹாலிவுட்,பாலிவுட்,கோலிவுட்,மல்லுட்.டோலிவுட் என எல்லா உட்டுகளுமே அனைத்து மேடை நிகழ்ச்சிகளிலும் டமாரம் அடித்து வருகின்றனர்.ஆனால் அவர்கள் துறையில் உள்ள சிலரே திருட்டு வி.சி.டி யில்தான் புதிய திரைப்படங்களை பார்க்கின்றனர் என்பது நகைப்புக்குரிய விசயம்.இதை வெளிப்படையாக சொல்லவும் செய்கின்றனர்.சில மாதங்களுக்கு முன்னர் கே.எஸ் ரவிக்குமார் புதிய திரைப்படம் ஒன்றை திருட்டு வி.சி.டி யில் பார்த்ததாக உளறி வைத்தார். இப்போது திருட்டு வி.சி.டி.யில் திரைப்படம் பார்த்தவர் பாலிவுட்டின் மெகா ஸ்டார் சல்மான்கான். புதிதாக வெளியிடப்படும் தமழ் திரைப்படங்களை உடனுக்குடன் பார்த்துவிடுவதில் சல்மானுக்கு ஆர்வம் அதிகம் ஏனென்றால் திரைப்படம் நன்றாக இருந்தால் அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன் பதிவு செய்துவிடலாம் அல்லவா. அப்படி அவர் சமீபத்தில் பார்த்த திரைப்படம் அஜித் நடித்த மங்காத்தா. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு
தொலைபேசி மூலம் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவைத் தொடர்பு கொண்டு திரைப்படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.ஆனால் நான் பார்த்த பிரின்ட்தான் சரியில்லை .அதனால் ஒரிஜினல் பிரின்ட் ஒன்றை அனுப்பி வைக்குமாறு வெங்கட்பிரபுவிடமே கேட்டுள்ளார்.உடனே வெங்கட் பிரபுவும் அடுத்த விமானத்திலேயே ஒரு ஒரிஜினல் பிரின்டை மும்பைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.இதில் யாரை குற்றம் சொல்ல கேட்டவரையா ,கொடுத்தவரையா.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால,
நான் என் வீட்டில் திருடலாம் அடுத்தவர்தான் என் வீட்டில் திருடக்கூடாது.
இதுவும் நியாயம் தானே.

October 16, 2011

சிங்கார சென்னையா சிரங்கு சென்னையா.

ஆத்திரத்தைக் கூட அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்க முடியாது என்று நம்மூரில் ஒரு சொலவடை உண்டு.உண்மையில் பெருநகரங்களில் வாழும் மக்கள் மூத்திரத்தை அடக்கித்தான் ஆக வேண்டிய நிலை .ஏனென்றால் நகரங்களில் கழிப்பிட வசதிகள் மிக குறைவு.அதிலும் பெண்களில் நிலை கேட்கவே வேண்டாம்.வீட்டில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை அதே போல் அலுவலகத்துக்கு சென்ற பிறகும் பிரச்சனை இல்லை .ஆனால் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையான பயண தூரம்தான் பிரச்சனை.சென்னையில் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு பேருந்து மற்றும் மின்சார ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.சிலருக்கு இரண்டு மூன்று பேருந்துகள் மாறிமாறி பயணம் செய்துதான் அலுவலகத்தை அடைய வேண்டியிருக்கிறது.சென்னையில் வாழும் சராசரி குடிமகன் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை பயணத்திற்காக செவவிடுகிறான்.அதற்கு காரணம் அலுவலகம் தொலைவில் இருக்கலாம் அல்லது போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் இருக்கலாம். இப்படி நிலமை இருக்கையில் பெரும்பாலான பேருந்து நிலையங்களிலும் ,மின்சாரயில் நிலையங்களிலும் கழிப்பிட வசதி இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் கழிவறை பாதுகாப்பாக இருக்கட்டும் என்று பூட்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.
கழிவறையை ஏன் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.ஒருவேளை வாடிக்கையாளர்கள் குறைவு என்று கடைகளை மூடுவது போல் பயன்படுத்துவோர் குறைவு என்று பூட்டு போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ.அல்லது பராமரிக்க முடியாமல் போகலாம் என்பதற்காவா.சென்னை கடற்கரை சந்திப்பிலிருந்து வேளாச்சேரி சந்திப்பு வரை உள்ள ரயில் நிலையங்களில் கழிவறை இருக்கிறது ஆனால் பூட்டி வைத்திருக்கிறார்கள்(சென்னை கடற்கரை சந்திப்பை தவிர்த்து)என்பது குறிப்பிடத்தக்கது.


கழிவறை என்பது லாபம் ஈட்டும் நோக்கிலா அமைக்கப்படுகிறது?,சேவையின் கீழ் அமைக்கப்படுவதல்லவா சேவையென்று இருந்தாலும் இலவசமாக கூட தர வேண்டாம் சிறு கட்டணங்களை பெற்றுக்கொண்டு மக்கள் அதிகம் புளங்கும் இடங்களில் கழிவறைகள் அமைக்கலாம் அல்லவா.தற்போது கூட ஒரு சில இடங்களை தவிர்த்து ஏனய இடங்களில் இருக்கும் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கோயம்பேடு பேருந்து நிலைய கழிவறைகளில் மட்டும்தான் இலவசமாக பயன்படுத்த முடியும்.மற்றபடி
சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பிராட்வே பேருந்து நிலையம் வரை உள்ள கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள்.பெரிய நிறுவனங்கள் பூங்காக்கள் போன்றவற்றை பராமரிக்கும் செலவை ஏற்றுக் கொள்வதைப் போல கழிப்பிடங்கள் அமைத்து அதை பராமரிக்கும் செலவையும் ஏற்றுக்கொண்டால் பொது மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாகக் கருதப்படும்.ஏனோ இதை செய்ய தயங்குகிறார்கள்.



மனிதனின் முக்கியமான செயல்களே உணவு உண்பது பிறகு உங்களுக்கே தெரியும். வீடென்று ஒன்று இருந்தால் பூஜையறை இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு கழிவறைகளாவது இருக்கும்.ஆனால் தினந்தோறும் பல லட்சம் பேர் வந்துபோகும் நகரின் முக்கிய பகுதிகளில் ஒரு கழிப்பிடத்தைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.இந்நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் வந்தால் கழிவறை இருக்காது அதனால் அருகில் இருக்கும் மரங்களின் பின்னாலோ,எதிரே இருக்கும் சுவர்களிலோ தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள்.இப்படி பலபேர் தங்கள் கடமையை ஒழுங்காக ஆற்ற சிங்கார சென்னை என்று கூறிக்கொண்டிருக்கும் அரசே காரணமாய் இருக்கிறது.அதனால் சிங்கார சென்னை சிரங்கு சென்னையாகிக் கொண்டிருக்கிறது.எங்கு பார்த்தாலும் சிறுநீர் கழித்த தடங்கள் மலம் கழித்த வடுக்கள் சகிக்க முடியவில்லை.



முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் போது மேம்பாலங்கள் அமைக்கப்படும்,சாலைகள் போட்டுத்தரப்படும்,குடி நீர் வசதி செய்துத் தரப்படும் என்று எல்லா மக்களுக்கும் பயன்படும் வகையில் பொதுவான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது என்வென்றால் மிக்சி வழங்கப்படும் ,டி.வி வழங்கப்படும்,தங்கம் வழங்கப்படும் என்று தனியொரு குடும்பத்தை திருப்திபடுத்தும் நோக்கில் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
பொதுவான பிரச்சனைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை இது கழிவறைக்கு மட்டுமல்ல பொதுவானவை என்று எது உள்ளதோ அவற்றிற்கெல்லாம் இது பொருந்தும்.




இந்த பதிவை நான் எழுத காரணம் சென்னையில் ஒரு சில இடங்களில் சிறுநீர் கழிக்க கழிவறை இல்லாமல் அல்லது கழிவறை இருக்கும் இடம் தெரியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கே யப்பப்பபபபபபபபபபபபபபபா.......