January 8, 2012

நக்கீரன் பத்திரிகை மீது தாக்குதல்.சரியா தவறா?

தமிழ்நாட்டின் நேற்றைய சூடான விவாதம் நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது சரியா தவறா என்றுதான்.இணைய பக்கங்களிலும் செய்தித்தாளின் பக்கங்களிலும் இது குறித்து கண்டனமும் கருத்தும் நிரம்பிவழிகிறது.



.பலர் கேட்கிறார்கள் மாட்டுகறி உண்பது என்பது அவ்வளவு பெரிய தவறா என்று.பிராமணர்கள் புலால் உண்ணமாட்டார்கள் அது வேறு விசயம்.ஆனால் நக்கீன் கட்டுரையில் மாட்டுக்கறியை ஜெயலலிதா சமைத்து எம்.ஜி.ஆருக்கும் கொடுத்து தானும் உண்டதாக எம்.ஜி.ஆர் கூறியது போல் கட்டுரையில் பதிவாகியிருந்தது.இந்த செய்தியை படிக்கும் பொதுமக்களாகிய நமக்கு பல வித எண்ணம் தோன்றும் விதமாக அந்த எழுத்தின் சாரம் இருக்கிறது.அதாவது இரட்டை அர்த்தம் தொனிக்கிறது.இப்படி ஒரு கட்டுரை வெளியிட நிரம்ப தைரியம் வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வர்,லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் இப்படி பெரும்பதவி வகிக்கும் ஒருவரைப் பற்றி இது போல் செய்தி வெளியிட்டால் கட்சி தொண்டனல்லாத பொதுமக்களுக்கே கோபம் வரும்.அம்மாவென்றும்,இதய தெய்வம் என்றும் கதறும் தொண்டனுக்கு கோபம் வந்ததில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.



சிலர் ஜெயலலிதாவின் தூண்டதலின் பெயரால்தான் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்க கூடும் என்கிறார்கள்.இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை ஏனென்றால் தூண்டிவிட்டோ அல்லது திட்டமிட்டோ இந்த சம்பவம் நடந்திருந்தால் இன்னும் விபரீதமான அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.அலுவலகத்தின் கண்ணாடிகளும் அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாகவே செய்திகள் வலம் வருகின்றன.தாக்கப்பட்டது தவறு என்பவர்கள் சொல்லும் காரணம் சட்டம் என்று ஒன்று எதற்கு இருக்கிறது அதன் மூலமாக உங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாமே என்று.உணர்ச்சியை தூண்டும் விதமாக செய்தியை வெளியிட்டால் முதலில் உணர்ச்சிதான் கிளர்ந்தெழும் பிறகுதான் மூளை வேலை செய்யும் என்று எதிர் தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.நக்கீரன் பத்திரிகையை பொறுத்த வரையில் ஆரம்பம் முதலே அ.தி.மு.க எதிர்ப்பு பத்திரிகையாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.எப்போதும் ஜெயலலிதாவின் குறைகளை சுட்டிக்காட்டும் நக்கீரன். நிறைகளை கண்டுகொண்டதில்லை.கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தது.அதாவது தி.மு.க 160 இடங்களையும் அ.தி.மு.க 40 இடங்களையும் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டது.இப்படி நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கும் ஒரு பத்திரிகைதான் நக்கீரன். அதுமட்டுமல்லாமல் தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க எந்த அளவிற்கும் தரமிளப்பார்கள் என்பது நித்தியானந்தாவைப் பற்றி செய்தி வெளியிட்டதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.கோபாலின் யுத்தம் என்றொரு புத்தகம் படிக்க நேர்ந்தது அதை படித்த போது ஒருவன் இப்படி எல்லாம் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள முடியுமா என்று யோசித்தேன் .அந்த அளவிற்கு சுய புராணங்களும்,வெட்டி வியாக்யானங்களுமே நிரம்பியிருந்தது அந்த புத்தகத்தில்.இதில் அந்த புத்தகத்திற்கு இரண்டு மூன்று பாகங்கள் வேறு.பத்திரிகை சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நக்கீரன் மட்டுமல்ல அனைத்து பத்திரிகைகளும் முதலில் தங்களின் லாபத்தை முன்நிறுத்திய பின்னே சேவை என்னும் பாடவதியை வைத்து பாட வைக்கிறார்கள்.பத்திரிகைச் சேவை என்பது மாறிப் போய் பத்திரிகைத் தொழில் என்றாகிய பிற்பாடு இதல்லாம் சகஜம்தானே.

No comments: