July 22, 2012

மீனாட்சி அம்மன் கோயில் ஓர் அனுபவம்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன,அவைகளில் நான் பார்த்து ரசித்தது ஒன்றோ இரண்டோதான்.அந்த வகையில் சமீபத்தில் பார்த்து வியந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.அதை கோயில் என்பதைவிட கலைகளின் மறு வடிவம் என்றே கூறலாம்.அவ்வளவும் கலை நயமும்,வேலைப்பாடும்,நவீனமும் கலந்த ஓர் அம்சம்.கோயிலைப் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.




கோயிலுக்கு உள்ளே நுளையும் முன்பே வானுயர்ந்த கோபுரங்களையும் அதன் வேலைப்பாடுகளையும் பார்த்து வாய் பிளந்து விட்டேன்.பிளந்த வாயுடனே நுளைவாயிலினில் நுளைந்தேன்.அங்கு கோயிலுக்கு வருபவர்களை சோதனையிட காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.இரண்டு பாதைகளில் சோதனை நடந்து கொண்டிருந்தது.வலப்புற பாதையில் இரண்டு மூன்று ஆட்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததால் இடது பக்கமாக போவோம் என்று போனேன்.முன்னால் சிறு பகுதி துணியால் மறைக்கப்பட்டிருந்தது.அது என்னவென்று யோசிப்பதற்குள் வலது புறமிருந்து ஓர் அதட்டல் கேட்டது...யோவ் எங்கேயா போற இங்க வாய்யா என்று, நான் அதிர்ச்சியில் திரும்பினால் காவலதிகாரி என்னையே முறைத்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் போன பாதை பெண்களக்கானது என்று.கொஞ்சம் விட்டிருந்தால் அந்த துணி மறைப்பினுள் நுளைந்திருப்பேன்.நல்ல வேளை காவலதிகாரி குரல் கொடுத்ததால் அடிவாங்காமல் தப்பினேன்.செய்த தவறுக்காக காவல் அதிகாரியிடம் சாரி என்றேன்,என்ன சாரி பூரின்னுகிட்டு என்று நக்கலாக கேட்டுகொண்டே விட்டுவிட்டார்.

அப்படியே அசடு வளிந்தபடியே கோயிலுனுள் நுளைந்தேன்.பழைய அதிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி வந்தது.அத்தனையும் மனிதனின் கைவிரல் செய்தது.பெரிய கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,பெரிய பாளங்களாக அறுக்கப்பட்ட கற்களினால் மேற்கூரைகள்,ஒரே கல்லாலான துண்கள் என அனைத்துமே பிரம்மாண்டம்.இந்த கோயில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டியனால் துவங்கப்பட்டு கி.பி 1700களில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டிமுடிக்கப்பட்டதாக அங்கிருந்த குறிப்புப்பலகை கூறியது.(விக்கிப்பீடியாவிலும் இதே தகவல்தான்)
எனக்கு கேள்வியாக இருந்தது ஆயிரங்கால் மண்டபத்தை பற்றிதான்.எதற்காக இதைக் கட்டினார்கள் என்று புரியவில்லை. ஏனென்றால் மண்டபம் முழுவதுமே தூண்களால் நிரம்பியிருக்கின்றன,அப்படி இது எதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்?ஒரு வேளை பொது மக்களுக்கு சாப்பாடு போடுவதற்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.தூண்களின் இடையில் வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம் அதற்கான இடைவெளிமட்டுமே இருக்கிறது.அதுபோக அங்குள்ள சிற்பங்கள்,தூண்கள்,மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழையகாலத்து சிலைகள் என அனைத்துமே பரவசமேற்படுத்தக் கூடியவை.


ஆசைதீர ஓடி ஓடி கோயிலை சுற்றிப்பார்த்தேன்.எல்லாமுமே நன்றாக இருக்க கோயிலுனுள் சில முரண்பாடுகள்.

பொதுமக்கள் வழிபடுவதற்காக மன்னர்கள் கட்டிவைத்த கோயிலை இப்போது சந்தையாக்கியிருக்கிறார்கள்.குறைந்தது நூறு கடைகளாவது கோயிலின் உட்புறம் காணலாம்.அடுத்தது வெளிநாட்டினர் சாமியை சந்நிதானம் சென்று தரிசனம் செய்ய அனுமதியில்லை.ஆனால் 200 ரூபாய் கட்டினால் வெளிநாடோ உள்நாடோ எவன் வேண்டுமென்றாலும் உள்ளே போகலாம்.என்னே ஒரு கலாச்சாரம்.அடுத்து போட்டோ, வீடியோ எதுவும் எடுக்கக்கூடாது.கண்டிப்பா எடுக்கணும்னா வீடியோக்கு 250 ரூபாய் போட்டோவுக்கு ஐம்பது ரூபாய் அது கோனிக்காவுல எடுத்தாலும் சரி மொபைல்ல எடுத்தாலும் சரி அது உங்கபாடு.இப்படி வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் கோயில் நிர்வாகம் அந்த பணத்தை வைத்து பொதுவான நலத்திட்டங்கள் ஏதேனும் செய்தனரா என்றால் இல்லை என்றே பதில் இருக்கும்.
இப்படி எதற்காக பொதுமக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்ள வேண்டும்?(ஒரு வேளை பஞ்சத்துல இருப்பாங்களோ...)இப்படி வசூலிப்பதற்கு ஒரு தடை உத்தரவு கொண்டு வரமாட்டார்களா?
இது மாதிரி ஒரு சில வழிப்பறிகளை தவிர்த்து விட்ட கோயிலை பார்த்தால்,ரசித்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும்.எனக்கு மனதுக்குள் பறந்தது.


சின்ன சந்தேகம்....
மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த பாதாள அறை,ரகசிய அறை எதுவும் இல்லையா?ஏன்னா நம்ம திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்ல உள்ள சில பல அறைகளில் பத்து,இருபது லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.இங்கும் எதேனும் அறைகள் இருந்தால் அதில் நூறோ ,இருநூறோ கோடி இருந்தால் பண தட்டுப்பாடில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினருக்கு உதவியாய் இருக்குமே.....






மேலும் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் இந்தச் சுட்டி சொடுக்கவும்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

No comments: